வெள்ளி விழாவை எட்டிய டிரம்ப்; மவுனம் சாதிக்கும் பிரதமர்... காங்கிரஸ் குற்றச்சாட்டு


வெள்ளி விழாவை எட்டிய டிரம்ப்; மவுனம் சாதிக்கும் பிரதமர்... காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய டிரம்பின் பேச்சு வெள்ளி விழாவை எட்டியுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டாக கூறியுள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.

ஆனால், அமெரிக்காவின் தலையீட்டாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெறாமல் முடிவுக்கு வந்தது என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என இந்தியா கூறியது.

3-ம் நாட்டின் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு கூறியது. இந்நிலையில், டிரம்ப் செய்தியாளர்களிடம் சமீபத்தில் பேசும்போது, உண்மையில் வான்வெளியில் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றார்.

நாங்கள் நிறைய போர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். ஆனால், இரு அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் தீவிர கவனத்தில் கொள்ள கூடியது என்றார். அவர் தொடர்ந்து இதுபோன்று கூறி வருவதற்கு பதிலளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் உயர்த்தி வருகின்றன.

டிரம்ப் இந்த முறை கூறும்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரானது அணு ஆயுத போரில் சென்று முடிய இருந்தது. அதனை நான் தடுத்து நிறுத்தினேன் என மீண்டும் நேற்று கூறினார். இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் (பொறுப்பு) ஜெயராம் ரமேஷ் இன்று கூறும்போது, நாடாளுமன்றத்தில், பஹல்காம்-சிந்தூர் பற்றிய விவாதத்திற்கான உறுதியான தேதிகளை வழங்க பிரதமர் மோடி அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதில் வெள்ளி விழா கண்டிருக்கிறார். அவர், கடந்த 73 நாட்களில், 25-வது முறையாக இதனை பெரிதுப்படுத்தி கூறி வருகிறார். ஆனால், இந்திய பிரதமரோ முற்றிலும் அமைதி காத்து வருகிறார் என்றார்.

வெளிநாட்டுக்கு செல்வதற்கும், சொந்த நாட்டில் ஜனநாயக அமைப்புகள் நிலைத்தன்மையை இழப்பதற்கும் நேரம் தேடி கொண்டிருக்கிறார் என எக்ஸ் வலைதளத்திலும் அதுபற்றி பதிவிட்டு உள்ளார்.

ஆனால், டிரம்பிடம் கடந்த மாதம் 35 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி அப்போது, இந்தியா மத்தியஸ்தம் செய்யும்படி கோரவில்லை. ஒருபோதும் அதனை ஏற்று கொள்ளாது என்று தெளிவாக கூறிவிட்டார்.

பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு ஏற்பவே, ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான இரு நாடுகளுக்கு இடையேயான விவாதங்கள் நடந்தன என்றும் கூறினார்.

1 More update

Next Story