இளைஞர் கொலையால் தடைப்பட்ட திருமணத்தை முன்நின்று நடத்திய போலீசார்

மாவட்ட எஸ்பி , மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் குண்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் உதய குமாரி. இவருக்கு கடந்த 26ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 24ம் தேதி உதய குமாரியின் வீட்டில் கொள்ளையர்கள் நுழைந்து திருமணத்திற்கு வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையை தடுக்க முயன்ற உதய குமாரியின் சகோதரன் சிவ்தினை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் கயன் சந்த் என்பவரை கடந்த 8ம் தேதி என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். அதேவேளை, வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது, இந்த சம்பவத்தில் சகோதரன் சிவ்தின் சுட்டுக்கொல்லப்பட்டதாலும், உதயகுமாரியின் திருமணம் தடைபட்டது.
இதுகுறித்து அறிந்த மாவட்ட எஸ்பி வினத் ஜெய்ஸ்வால் , மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இரு தரப்பும் சமாதானமான நிலையில் உதய குமாரிக்கு நேற்று திருமணம் நடத்தினர். மாவட்ட எஸ்.பி. வினத் ஜெய்ஸ்வால் தலைமையிலான போலீசார், உதயகுமாரிக்கு திருமணம் நடத்தி வைத்தனர். மாவட்ட எஸ்.பி. திருமண செலவுக்கு ரூ. 1.50 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். திருமணத்தை போலீசார் முன்நின்று நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






