ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் துணையாக நிற்கிறோம் -அமித்ஷா

கதுவா மாவட்டம் முழுவதும் "கனமழை முதல் மிக கனமழை" பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜோத் காட்டியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் 6 பேர் காயமடைந்தனர். கதுவா மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல்வேறு நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கதுவா மாவட்டம் முழுவதும் "கனமழை முதல் மிக கனமழை" பெய்யும் என்றும், பொதுமக்கள் நீர்நிலைகளிலிருந்து விலகி இருக்குமாறும் கதுவாவின் வானிலை அறிக்கையின்படி, அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஆறுகள், ஓடைகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும், மலைப்பாங்கான மற்றும் நிலச்சரிவு மற்றும் பிற ஆபத்து நிறைந்த பகுதிகளைத் தவிர்க்கவும் பொதுமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். கனமழை காரணமாக, நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும். திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கும். அவசர உதவிக்கு 01922-238796 மற்றும் 9858034100 எண்களை அழைக்கவும்" என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீர் கதுவா மேக வெடிப்பு பெருவெள்ளம், தேசிய பேரிடர் மீட்பு படையிர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜம்மு காஷ்மீர் சகோதர சகோதரிகளுடன் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார். முன்னதாக ஆகஸ்ட் 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






