மது போதைக்கு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் சாவு


மது போதைக்கு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் சாவு
x

புதுவையில் மது போதைக்கு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்..

புதுச்சேரி

புதுவையில் மது போதைக்கு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்..

ஆட்டோ டிரைவர்

விழுப்புரம் மாவட்டம் செட்டிக்குப்பம் செட்டி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). இவர் புதுவை நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

குடிப்பழக்கம் உடைய ஆறுமுகம் நேற்று இரவு நண்பர்களுடன் கேண்டீன் வீதியில் மது அருந்தி உள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதிக குடிபோதையா?

இதைத்தொடர்ந்து மகேஷ் என்பவர் அவரை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிக குடிபோதையில் ஆறுமுகம் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பஸ் கண்டக்டர்

திருபுவனை சின்னபேட் நடுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (47). தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி முத்துலட்சுமி (41). நாகராஜன் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கடந்த 2 நாட்களாக நாகராஜன் வீட்டிற்கு வராமல் மதுகுடித்து வந்தார்.

நேற்று காலை புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாராயக்கடை அருகே நாகராஜன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் திருபுவனை போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் நாகராஜன் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story