கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபர் உள்பட 4 பேர் கைது


கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபர் உள்பட 4 பேர் கைது
x

புதுவையில் அரசு பள்ளி அருகில் கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவையில் அரசு பள்ளி அருகில் கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் தட்சிணாமூர்த்தி அரசு பள்ளி அருகில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ரூவாண்டா நாட்டை சேர்ந்த காசிகா அலைன் (வயது 33), ரெட்டியார்பாளையம் பூமியான்பேட்டையை சேர்ந்த அருண் குமார் என்ற அருண் (26), செல்லாம் பாபுநகரை சேர்ந்த சையது தாஜிதீன் (28), வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த தான்சிலாஸ் என்ற தனுஷ் (24) என்பதும், அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.

4 பேர் கைது

மேலும் ரூவாண்டா நாட்டை சேர்ந்த காசிகா அலைன் கடந்த 2013-ம் ஆண்டு சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ. படிப்பதற்காக இந்தியா வந்தார். அவர் படித்து முடிந்த பின்னர் மீண்டும் ரூவாண்டா நாட்டிற்கு செல்லாமல் புதுச்சேரி வந்து ஓட்டலில் வேலை செய்து வந்தார். அப்போது ஆரோவில் பகுதியை சேர்ந்த சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து புதுவையில் சிலருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் காசிகா அலைனிடம் கஞ்சா வாங்கி அருண், சையது தாஜிதீன், தனுஷ் ஆகியோர் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள், பாஸ்போர்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story