இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு


இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்குப்பதிவு
x

புதுவையில் காலி மனையில் மோட்டார் சைக்கிள் நிறுத்திய தகராறில் இருதரப்பினர் மோதியதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்குளம்

புதுச்சேரி சண்முகாபுரம் பிரியதர்ஷினி நகர் நேதாஜி வீதியை சேர்ந்தவர் பாபு (வயது 57). இவர், சண்முகாபுரம் பி.பி.சி. நகரில் கிருஷ்ணகுமார் (57) வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த நிலையில், வீட்டின் எதிரே உள்ள காலிமனையில் தனது பழுதான மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்தநிலையில் பாபு, அங்கிருந்து வீட்டை காலி செய்த பிறகும், மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லவில்லை. இந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச்செல்லுமாறு பாபுவிடம் கிருஷ்ணகுமார் கடந்த 2 நாட்களுக்கு முன் கூறினார். இதையடுத்து பாபு, அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் மோட்டார் சைக்கிளை எடுக்க அங்கு சென்றபோது, கிருஷ்ணகுமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. சற்று நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி, தாக்கிக்கொண்டனர்.

இது குறித்து இருதரப்பினரும் மேட்டுப்பாளையம் போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story