நகைக்கடை முன்பு வாடிக்கையாளர்கள் மறியல்


நகைக்கடை முன்பு வாடிக்கையாளர்கள் மறியல்
x
தினத்தந்தி 7 Oct 2023 5:29 PM GMT (Updated: 7 Oct 2023 6:16 PM GMT)

சீட்டு நடத்தி மோசடி செய்த நகைக்கடை முன்பு வாடிக்கையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

புதுவையில் சீட்டு நடத்தி மோசடி செய்த நகைக்கடை முன்பு வாடிக்கையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அலைக்கழிப்பு

புதுவை காமராஜர் சாலையில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்தவர்கள் நகைச்சீட்டு கட்டி வந்தனர். அவர்களது சீட்டுகாலம் முடிந்தநிலையில் அதற்குரிய நகையை தருமாறு நகைக்கடைக்கு வந்து கேட்டனர். ஆனால் நகைக்கடை நிர்வாகம் நகைகளை கொடுக்காமல் அவர்களை அலைக்கழித் துள்ளது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர்கள் நகையை கேட்டு நகைக்கடையை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஒன்றிரண்டு வெள்ளி நகைகளை கொடுத்து கடை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.

சாலைமறியல்

இதற்கிடையே இன்றும் புதுவை, கடலூர் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் கட்டிய பணத்துக்குரிய நகையை தரக்கோரி கடையை முற்றுகையிட்டனர். மேலும் கடை முன்பு காமராஜர் சாலையில் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். கடை ஊழியர்களையும் அழைத்து பேசினார்கள்.

அப்போது நிர்வாக தரப்பில் வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்துக்கு பதிலாக காசோலை தர முன்வந்தனர். இதை ஏற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள் காசோலையை பெற்று கலைந்து சென்றனர்.


Next Story