பழுதானதால் 5 மாதங்களாக ஓரங்கட்டப்பட்ட போலீஸ் ஆம்புலன்ஸ்


பழுதானதால் 5 மாதங்களாக ஓரங்கட்டப்பட்ட போலீஸ் ஆம்புலன்ஸ்
x

பழுதானதால் 5 மாதங்களாக போலீஸ் ஆம்புலன்ஸ் ஓரங்கட்டப்பட்டது. இதனால் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் போலீசார் அவதிக்குள்ளாகிறார்கள்.

திருநள்ளாறு

பழுதானதால் 5 மாதங்களாக போலீஸ் ஆம்புலன்ஸ் ஓரங்கட்டப்பட்டது. இதனால் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் போலீசார் அவதிக்குள்ளாகிறார்கள்.

6 போலீஸ் நிலையங்கள்

காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால், திருநள்ளாறு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம், நிரவி உள்ளிட்ட 6 போலீஸ் நிலையங்கள் உள்ளன. போலீஸ் நிலையங்களில் அவசர தேவைகள், விபத்து மற்றும் ஆதரவற்றோர்கள் மீட்கும் பணியில் காவல்துறை ஆம்புலன்ஸ் செயல்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பழுதாகி நிரவி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஓரம் கட்டி நிறுத்தி உள்ளனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமலும் மற்றும் சாலையோரம் இறந்தவர்கள் சடலத்தை அப்புறப்படுத்த முடியாமலும் போலீசார் தவித்து வருகின்றனர்.

சொந்தமாக செலவு

விபத்துகளில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக அப்புறப்படுத்த முடியாமல் அரசு மருத்துவமனை ஆம்புலன்சை நம்பி பல மணி நேரம் சாலையிலேயே சடலத்தை போட்டுவைத்து காவல் காக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் கிடைக்காத நேரத்தில் தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்து போலீசார் சொந்தமாக செலவு செய்து சடலத்தை அப்புறப்படுத்தும் நிலை உள்ளது.

எனவே மீட்பு பணிகளுக்காக புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் ஆம்புலன்ஸ் கொடுக்க வேண்டும் அல்லது பழுதாகி நிற்கும் ஆம்புலன்சையாவது சரி செய்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story