2 கட்டங்களாக மாணவர்களை சந்தித்து பரிசுகளை வழங்கும் விஜய்


Vijay will give prizes to the students in 2 phases
x
தினத்தந்தி 10 Jun 2024 4:44 AM GMT (Updated: 10 Jun 2024 5:26 AM GMT)

பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு விஜய், தொகுதி வாரியாக பரிசுகளை வழங்க உள்ளார்

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார்.

இந்நிலையில், இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்க உள்ளார். முதற்கட்டமாக, வரும் 28-ம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதில், கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்க உள்ளார் .

இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 3-ம் தேதி சென்னை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்க உள்ளார். இதனை விஜய், பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்க உள்ளார்.

கடந்த ஆண்டு, மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதிருந்ததால் இந்தாண்டு இரண்டு கட்டங்களாக மாணவர்களை விஜய் சந்தித்து பரிசுகளை வழங்குகிறார்.


Next Story