ஸ்கூட்டரில் வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 2.5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு - மா்மநபர்களுக்கு வலைவீச்சு

கோப்புப்படம்
ஸ்கூட்டரில் வந்த பெண்ணை வழிமறித்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி இரண்டரை பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் மனைவி நித்யா (27 வயது), இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு பணி முடிந்ததும் பஸ்சில் கோலியனூர் வந்து இறங்கினார்.
பின்னர், அங்கு நிறுத்தி வைத்திருந்த தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கப்பியாம்புலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கப்பியாம்புலியூர் மேம்பாலம் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த 2 மர்மநபர்கள் திடீரென நித்யா ஓட்டிச்சென்ற ஸ்கூட்டரை வழிமறித்தனர்.
பின்னர், நித்யாவை கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினர். இதை சற்றும் எதிர்பாராத நித்யா திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதற்குள் மா்மநபர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இதுகுறித்து நித்யா விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.






