எழும்பூரில் நகை வியாபாரியை கடத்தி பணம், தங்க நகைகளை பறித்த வழக்கில் 6 பேர் கைது


எழும்பூரில் நகை வியாபாரியை கடத்தி பணம், தங்க நகைகளை பறித்த வழக்கில் 6 பேர் கைது
x

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 203 கிராம் தங்க நகைகள், ரூ.6.50 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சோமுதெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (64 வயது). நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 26-ந்தேதி சென்னையில் நகைகளை கொள்முதல் செய்துவிட்டு இரவு சுமார் 7.40 மணியளவில் எழும்பூர், பாந்தியன் ரோடு, இருதய ஆண்டவர் சர்ச் அருகே சுமார் 131 கிராம் தங்க நகைகள், 1.250 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 31,39,045 ரூபாய் பணம் அடங்கிய பையுடன் பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது, அங்கு காரில் வந்த மர்மநபர்கள் சிலர் ரவிச்சந்திரனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். அவரிடமிருந்த தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு அவரை போரூர் அருகே காரிலிருந்து கீழே இறக்கி விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து ரவிச்சந்திரன் F-2 எழும்பூர் காவல்நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், எழும்பூர் உதவி ஆணையாளர் மற்றும் F-2 எழும்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு (எ) கமல், முத்து ராமலிங்கம், தீனா (எ) தினகரன், பிரேம்குமார், பிரபு மற்றும் மதுரை மேலூரை சேர்ந்த முத்துலிங்கம் ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 203 கிராம் தங்க நகைகள், வெள்ளி கட்டிகளுடன் 3.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.6.50 லட்சம் பணம் மீட்கப்பட்டது. குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 7 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் போலீசார் விசாரணையில், ரவிச்சந்திரன் வாரத்தில் 3 நாட்கள் சென்னை, சவுகார்பேட்டைக்கு வந்து நகைகளை வாங்கி விட்டு, ஆட்டோவில் எழும்பூருக்கு சென்று தனியார் பேருந்தில் காரைக்குடிக்கு செல்வதை குற்றவாளிகள் நோட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ரவிச்சந்திரனை காரில் பின்தொடர்ந்து கடத்திச்சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவான குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.

1 More update

Next Story