சென்னையில் ரூ.2.2 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: தாய்-தந்தை உள்பட 6 பேர் கைது


சென்னையில் ரூ.2.2 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: தாய்-தந்தை உள்பட 6 பேர் கைது
x

சென்னையில் பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தையை வறுமை காரணமாக வளர்க்க முடியாமல் தவித்த தம்பதியினர், விற்க முடிவு செய்தனர்.

சென்னை

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் எழில் நகரை சேர்ந்தவர் ஸ்ரீஜி (வயது 27), பெயிண்டர். இவரது மனைவி வினிஷா (23). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த மே மாதம் 4-வதாக வினிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக அந்த குழந்தையை வளர்க்க முடியாமல் தவித்த ஸ்ரீஜி-வினிதா தம்பதியினர், 3 மாதமே ஆன அந்த பெண் குழந்தையை விற்க முடிவு செய்தனர்.

தனது தோழி சிவரஞ்சனி(22) என்பவரிடம் குழந்தையை விற்று தரும்படி மாமியார் சரளா(45) உடன் சேர்ந்து வினிஷா கேட்டார். இதையடுத்து சிவரஞ்சனி, தனது மாமியாரான தூய்மை பணியாளர் சகாய மேரி(39) என்பவரிடம் விவரத்தை கூறினார். அவர், தனது தோழியான சுமதி(35) என்பவரிடம் கூறினார்.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த ஒரு தம்பதிக்கு அந்த பெண் குழந்தையை விற்க சுமதி ஏற்பாடு செய்தார். இதற்காக ரூ.2.20 லட்சம் ஸ்ரீஜி-வினிஷா தம்பதிக்கு தரப்பட்டது. இதில் சிவரஞ்சினிக்கு ரூ.15 ஆயிரம், சகாய மேரிக்கு ரூ.5 ஆயிரம், சரளாவுக்கு ரூ.50 ஆயிரம் என அந்த தம்பதி கொடுத்துள்ளனர். குழந்தையை ஜூலை மாதம் திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதியிடம் ஒப்படைத்தனர்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வாரம் ஒரு முறை திருவண்ணாமலை தம்பதி குழந்தையை கண்ணகி நகருக்கு கொண்டு வந்தனர். அப்போது குழந்தையை விற்ற தகவல் குழந்தைகள் நல அலுவலருக்கு தெரிந்தது. இது தொடர்பாக கண்ணகி நகர் போலீசாரிடம் குழந்தைகள் நல அலுவலர் புகார் செய்தார். இதையடுத்து கண்ணகி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் குழந்தையின் பெற்றோர், வாங்கிய தம்பதி மற்றும் குழந்தையை விற்க உதவியவர்கள் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் குழந்தையின் தந்தை ஸ்ரீஜி, அவரது மனைவி வினிஷா, மாமியார் சரளா, சிவரஞ்சனி, சகாயமேரி, சுமதி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். விற்கப்பட்ட 6 மாத பெண் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கண்ணகி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story