துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை கூண்டுக்கான முழு விளக்கம்...!

புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டால் மக்கள் அச்சமடைய தேவையில்லை.
சென்னை,
புயல் உருவாகி கடலோரப்பகுதிகள் நோக்கி நகர்ந்து வரும்போது துறைமுகங்களில் புயல் குறித்த எச்சரிக்கையை விடுக்கும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. 1-ம் கூண்டு தொடங்கி 11-ம் எச்சரிக்கை கூண்டு வரை ஏற்றப்படுகின்றன.
அவ்வாறு ஏற்றப்படும் ஒவ்வொரு கூண்டுக்கும் ஒரு விளக்கம் உள்ளது. புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டால் அப்பகுதி மக்கள் அச்சமடைய தேவையில்லை. பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள். ஏற்றப்படும் கூண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதனை தெரிந்துக்கொண்டு நாம் முன்னெச்சரிக்கையாக இருந்துக்கொள்ள வேண்டும்.
புயல் எச்சரிக்கை கூண்டு விபரங்கள்:-
1-ம் எண் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம்.இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால் சற்றே பலமாக காற்று வீசுகிறது என்று பொருள்.
2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையைக் கண்டால், துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும்.
3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
4-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து 3 மற்றும் 4-ம் எண்.கூண்டுகள் துறைமுகத்தில் மோசமான வானிலை நிலவுவதை தெரியப்படுத்துகின்றன...
5 -ம் எண் எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகி இருப்பதைக் குறிக்கிறது அத்தோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
6 -ம் எண் எச்சரிக்கை கூண்டு, 5 வது எண்ணின் எச்சரிக்கைதான் ஆனால் துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றுபொருள்.
7 ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை.. 5,6 மற்றும் 7-ம் எண் கூண்டுகள் துறைமுகத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் குறிக்கிறது.
8 -ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம்' என்று பொருள்.அதாவது புயல்,தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது. அப்போது துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
9 -ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப்புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள் மேலும் துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும்.
10 -ம் எண் எச்சரிக்கை கூண்டு எச்சரிக்கை விடப்படுமானால்,அதி தீவிரப் புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்..






