விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் - டிடிவி தினகரன்

கோப்புப்படம்
முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அரியலூரில் அமமுக நிர்வாகி இல்ல விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
பாஜக கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்போது நாங்கள் எப்படி கூட்டணியில் இருக்க முடியும்? முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை.
விஜய் பிரசாரத்தை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். நிறைய இளைஞர்கள், இளம் பெண்கள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் திரண்டு வந்திருந்தனர். ஜெயலலிதா பாணியில் விஜய்யின் பேச்சு இருந்ததாக நான் பார்க்கவில்லை. இருந்தாலும் ஜெயலலிதா பாணியில் ஒருவர் பேசினால், அது மகிழ்ச்சியானதுதான். நள்ளிரவு தாண்டிய பிறகு விஜய் பிரசாரத்தை ரத்து செய்துதான் ஆக வேண்டும்.
விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். அந்த கூட்டணியில் இணைவது குறித்து இப்போது முடிவு எடுக்கவில்லை. ஏற்கனவே திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி உள்ளது. சீமான் தனி அணியாக போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.






