"அதிமுக-பாஜக கூட்டணி - மூழ்கும் கப்பல்": செல்வப்பெருந்தகை தாக்கு


அதிமுக-பாஜக கூட்டணி - மூழ்கும் கப்பல்:  செல்வப்பெருந்தகை தாக்கு
x

பா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என செல்வப்பெருந்தகை கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்துள்ளனர். இதை பார்த்துக் கொண்டிருந்த டி.டி.வி. தினகரன் வெளியே வந்துவிட்டார். ஓ.பி.எஸ். வெளியே வந்துவிட்டார். இன்னும் யாரெல்லாம் வெளியே வரப் போகிறார்கள் என தெரியவில்லை. அது மூழ்குகின்ற கப்பல். அதில் ஏறினால் மூழ்கி விடுவோம் என்று ஒவ்வொருவராக காரணத்தை சொல்லி வெளியே வருகிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் பா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியை ஏற்க மாட்டார்கள். அது எதார்த்தமான உண்மை. இதை புரிந்து கொண்டதால் டி.டி.வி. தினகரன் வெளியே வந்தார். இன்று செங்கோட்டையன் வெளியே வந்து உள்ளார். ஆகையால் மக்கள் இவர்களுக்கு கெடு கொடுத்து விட்டனர். இது மூழ்குகின்ற கப்பல். இதில் ஏறவும் வேண்டாம், இறங்கவும் வேண்டாம் என்று ஒவ்வொருவராக நினைத்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.

உறவாடி கெடுக்கும் ஒரு கட்சிதான் பா.ஜ.க. இதற்கு பல சம்பவங்கள் இருக்கு. எல்லா மாநிலங்களிலும் அவர்களது சித்து விளையாட்டை நடத்தியுள்ளனர். இப்போது உச்சபட்சமாக அ.தி.மு.க.வில் அவர்களது சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே அ.தி.மு.க.வினர் விழித்துக் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story