அதிமுக பாஜகவின் கைக்கூலி: மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாத நிலை உள்ளது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
மதுரை,
மதுரை திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டை பகுதியில் ரூ.27 கோடி மதிப்பீட்டிலும், கள்ளிக்குடி பகுதியில் ரூ.29 கோடியிலும் பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எய்ம்ஸ் ஜனவரியில் இடம் மாற்றம் செய்யப்படும். வெளிப்புற நோயாளிகள் பிரிவும், பெண்கள் விடுதியும் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதற்கான ஆய்வுகளை செய்ய உள்ளோம். மத்திய அரசினுடைய பணிகள் மிகவும் தொய்வாக நடைபெறுகிறது. மதுரைக்கு வரவேண்டிய மெட்ரோ திட்ட பணிகளை நிராகரித்துள்ளார்கள். இதற்கு தொடர்ந்து போராடுவோம்.
தமிழகத்தில் பா.ஜனதாவால் காலூன்ற முடியாத நிலை உள்ளது. இதற்காக தமிழகத்தை வஞ்சிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் பா.ஜனதாவினர் அமைதியை குலைக்க முயற்சி செய்கிறார்கள். அ.தி.மு.க. பா.ஜனதாவின் கைக்கூலிகள். அ.தி.மு.க.வை திருப்பரங்குன்றம் மக்கள் என்றும் மன்னிக்கப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






