சபரிமலைக்கு விரைந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை

சபரிமலையில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அரக்கோணம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடுமையான குளிரையும், இடை இடையே கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலையில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போலீசார் திணறி வருகின்றனர். நேற்று நண்பகல் வரையிலான 43 மணி நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் 18-ம் படியில் நீண்ட நேரம் நிற்காமல் உடனே தரிசனம் முடித்து திரும்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு சபரிமலைக்கு விரைந்துள்ளது. பம்பை, சபரிமலை சன்னிதானத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டு இருப்பார்கள் என கூறப்படுகிறது. பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளவும் பேரிடர் மீட்பு படையினர் உதவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவசம்போர்டு கேட்டுக்கொண்டதன் பேரில் அரக்கோணத்தில் இருந்து மீட்புக்குழு சென்றுள்ளது.






