சட்டசபை தேர்தல்; ஆகஸ்டு 15-ல் நெல்லையில் முதல் பா.ஜ.க. மாநாடு

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.
நெல்லை,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒருபுறம் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.வும் தேர்தலில் போட்டியிடுகிறது. இதனால், 4 முனை போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது.
இந்நிலையில், சென்னை காட்டாங்குளத்தூரில் பா.ஜ.க.வின் பூத் கமிட்டி தொடர்பான கூட்டம் இன்று நடந்தது. இதில், அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அப்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய கட்சி பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில், பா.ஜ.க.வின் முதல் மாநாடு நடைபெறும் இடம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஆகஸ்டு 15-ந்தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வுக்கு நாம் சுமை அல்ல. கூட்டணியில் நாம் இடம் பெற்றிருப்பது அ.தி.மு.க.வுக்கு பலம் சேர்க்கும் என காட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் நாம் செயலாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த தேர்தலில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி ஆகியவை நமக்கான சவாலாக உள்ளன. இதேபோன்று தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மனநிலை, ஆபரேஷன் சிந்தூர், அ.தி.மு.க. கூட்டணி ஆகியவை சாதகங்களாக உள்ள விசயங்களாக பார்க்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.