எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: உத்தரவை திரும்ப பெற்றது சென்னை ஐகோர்ட்டு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு திரும்பப் பெற்றுள்ளது.
சென்னை,
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், அதிமுக தொண்டர் எனக் கூறி திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதில், “அதிமுக விதிகளின்படி பொதுச்செயலாளரை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவரது தேர்வு செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு உரிமையியல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இந்த சூரியமூர்த்தியின் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கை உரிமையியல் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண், வக்கீல் நர்மதா சம்பத் ஆகியோர் ஆஜராகி, “அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை. உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அவருக்கு உரிமையும் இல்லை. எனவே, கீழ் கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று வாதிட்டனர்.
இவர்களது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘‘மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்து உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும், சூரியமூர்த்தி தொடர்ந்துள்ள வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிப்பதற்கும் இடைக்கால தடை விதிக்கிறேன். இந்த வழக்கிற்கு சூர்யமூர்த்தி பதில் அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற செப்டம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், “விஜய் நாராயண், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்ல எனவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு உரிமையில்லை எனவும் வாதிட்டார். சூரியமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளதை மறைத்து, தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என வாதிட்டார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமந்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும், வழக்கை நிராகரிக்க மறுத்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்த உத்தரவை திரும்பப் பெற்ற நீதிபதி பாலாஜி, வழக்கின் விசாரணையை வருகிற 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.






