எந்திரக் கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட சென்னை விமானம்


எந்திரக் கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட சென்னை விமானம்
x
தினத்தந்தி 8 Nov 2024 10:43 AM (Updated: 8 Nov 2024 11:13 AM)
t-max-icont-min-icon

விமானம் பழுதுபார்க்கப்பட்டு 7 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்லும்போது விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். விமானம் பறப்பது ஆபத்து என்பதை உணர்ந்த விமானி ஓடுபாதையிலேயே அவசரமாக விமானத்தை நிறுத்தினார்.

உடனே இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வழியில் நிறுத்தப்பட்ட விமானம் மீண்டும் நடைமேடைக்கு இழுவை வாகனங்கள் மூலமாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. உடனே விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த எந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள் 164 பேரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு உணவு போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விமானம் பழுதுபார்க்கப்பட்டு 7 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்டுள்ள எந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து உடனடியாக எடுத்த நடவடிக்கை காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story