கோவை மாணவி பாலியல் கொடூரம் - இந்து முன்னணி கடும் கண்டனம்

அரசு போதையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி பாலியல் கொடூரம் - இந்து முன்னணி கடும் கண்டனம்
Published on

சென்னை,

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் ஒரு கல்லூரி மாணவி சிலரால் பாலியல் கொடூரத்திற்கு ஆளானது தமிழகத்தை தலைகுனிய வைத்திருக்கிறது. குற்றவாளிகளை சுட்டு பிடித்ததாக இன்று செய்தி வந்துள்ளது, இதன் தாக்கத்தை குறைக்க காவல்துறை எடுத்த நடவடிக்கையாக இது பேசப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி மீது நடந்த தகாத குற்றச் செயல் குறித்த விசாரணையில் காவல்துறை நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளானது. குற்றம் நடந்து மாதங்கள் பல கடந்த பின்னரும் இன்னமும் அதில் உள்ள மர்மங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தமிழகத்திற்கு பெருமைமிகு பண்பாடு உண்டு. பெண்களை மதிக்கின்ற, பெண்களை பாதுகாக்கும் குடும்ப உறவுகள், சமூக உணர்வுகள் இருப்பதைக் காண்கிறோம்.

தமிழகத்தில் பெண்கள் போற்றப்படுபவர்களாக, கண்ணியமிக்கவர்களாக விளங்குகிறார்கள். அத்தகைய தமிழகத்தில் பெண் வன்கொடுமை, கூட்டுப்பாலியல் பலாத்காரம் எனும் கொடூரம் நடப்பது எத்தகைய அவமானம்.

பெண்கள் பாதுகாப்பிற்காக நிர்பயா திட்டத்தின்படி நிதி பெற்று செயல்பட்ட பிங்க் மகளிர் ரோந்து வாகனங்கள் என்னவாயிற்று? மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் பாதுகாப்பிற்கான திட்டங்கள் ஏட்டளவில் மட்டும் இருக்கிறதா! என்ற கேள்வி எழுகிறது.

மேலும் கஞ்சா போதை பெருகி வருகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்கிறதா? தினசரி பத்திரிகையில் போதை குற்றங்கள் பற்றிய செய்திதான் அதிகமாக வருகிறது. எல்லா வகையான குறறங்களுக்கும் போதை மிக முக்கிய காரணியாக உள்ளது. சமூகத்தை போதை பழக்கம் சீரழித்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

சமூதாயத்தை சீரழிக்கும் போதையால், பண்பாட்டையும் சீர்குலைக்க நடக்கும் இரவு விருந்து, ஹேப்பி ஸ்டீரிட் போன்றவைதான் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு காரணம். ஹேப்பி ஸ்டீரிட் போதை கூத்தை காவல்துறையே அனுமதிக்கிறது.

இதுபோன்ற சமூக சீரழிவை வளர்க்கக் காரணம் அரசின் குறிக்கோள், மது விற்பனையை பெருக்குவதில்தான் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. போதை தான் மனித பண்பை அழித்து சமூகத்தின் கட்டமைப்பை கெடுக்கிறது. இதற்கு காரணம் பொறுப்பற்ற அரசு நிர்வாகம் என்பதில் சந்தேகம் இல்லை.

பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு திரைப்படங்களும், சமூக பொறுப்புணர்வு இல்லாத சமூக ஊடகங்களும் தூண்டுதலாக இருக்கின்றன. இதன் மீதும் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

இதுபோன்ற கொடூர குற்றத்தில் இருந்து சமூகமும், அரசும், காவல்துறையும் பாடம் கற்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

மேலும் பெற்றோர் பெண் குழந்தைகளை மிகுந்த கண்காணிப்போடு வளர்க்க வேண்டிய பொறுப்பை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆண் குழந்தைகளின் நட்பு வட்டத்தையும் கவனித்து திருத்தும் கடமையை பெற்றோர்கள் உணர வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் சிறுவயது முதலே நல்ல பண்புகளை கற்றுத்தர வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டில் சமூக மாற்றத்திற்கான "ஐந்தமுதம்" என்ற கருத்தை முன்னெடுக்கிறது. அதில் ஒன்று குடும்ப ஒற்றுமை. தினசரி ஒரு வேளையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி அளவளாவி கருத்து பரிமாற்றத்தின் மூலம் சமூக உணர்வை வளர்ப்பது. உண்மையில் குடும்பங்களில் இன்று இது மிகமிக அவசியமானது. இதன்மூலம் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் அன்பும் நம்பிக்கையும் பண்பும் உறுதிபடும்.

அதேபோல வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களின் பழக்க வழக்கங்களை பெற்றோர் அன்புடன் விசாரித்து கவனிக்க வேண்டும். மாணவர்களும் தங்கள் குடும்பம் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதுடன், தங்கள் முன்னேற்றத்தை பெற்றோர்கள் ஆசையுடன் எதிர்பார்த்து காத்திருப்பதை உணர்ந்து தங்கள் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

அரசு போதையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக பொறுப்பற்றவர்களை கண்காணித்து சீர்படுத்த காவல்துறை முனைந்து செயல்பட வேண்டும். அதற்கு காவல்துறையின் ரோந்து பணி அவசியமானது.

இனி ஒரு விதி செய்வோம், தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றம் நடைபெறாமல் இருக்க எல்லோருக்கும் பொறுப்பு இருப்பதை உணர்ந்து செயல்பட இந்து முன்னணி சார்பில் அறிவுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com