அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தவெக பெண் நிர்வாகி கைது

தவெக பெண் நிர்வாகி மீது திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் அரசு அதிகாரி புகார் அளித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 56). இவர், பழனியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். திண்டுக்கல் சின்ன அய்யங்குளம் பகுதியை சேர்ந்த வடிவேல் மனைவி ரீத்தா (46). இவர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக உள்ளார்.
முருகானந்தத்துக்கும், ரீத்தாவுக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் முருகானந்தத்தை ரீத்தா அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அவர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூரியகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரீத்தாவை கைது செய்தனர். ரீத்தா மீது ஏற்கனவே தாடிக்கொம்பு, திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






