நடுங்கி அடங்கியது டெல்லி; அதிர்ந்து ஒடுங்கியது நெஞ்சு - கவிஞர் வைரமுத்து

டெல்லி சம்பவத்தில் அரசியல் செய்யாமல் அறமே செய்க என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 10 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது. விமானநிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய மையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“இறந்தோர் உயிர் அமைதியடைக காயமுற்றோர் உடல் நலமே பெறுக. எது காரணமாயினும் இன்னொரு முறை அது நிகழாதொழிக. அரசியல் செய்யாமல் அறமே செய்க. அமைதியின் சிறகடியில் தேசம் இளைப்பாறுக. "யுத்தம் இல்லாத பூமி - ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும். மரணம் காணாத மனித இனம் - இந்த மண்ணில் நிலைகொள்ளும் வரம் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.






