திமுகவுக்கு ஊழல் செய்வதில் தேசிய விருது கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி


திமுகவுக்கு ஊழல் செய்வதில் தேசிய விருது கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி
x

எந்த காலத்திலும் அதிமுகவை எவராலும் அழிக்கவே முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆரணி, செய்யாறில் மக்களை சந்தித்த பிறகு வந்தவாசி பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை நம்பிக்கொண்டிருக்கிறார். பலமான கூட்டணி என கனவு காண்கிறார். ஆனால் அதிமுக மக்களை நம்பி இருக்கிறது. மக்கள் நினைத்தால்தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும். ஸ்டாலின் பல கட்சிகளை இணைத்துக்கொண்டு எந்த திட்டமும் கொடுக்காமல், ஊழல் அரசை நடத்துகிறார்.

அதிமுகவின் 10 ஆண்டுகளில் விலைவாசி உயரவே இல்லை. நான் முதல்வராக இருந்த நேரத்தில் வறட்சி, கொரோனா, புயல் ஏற்பட்டபோதும் விலைவாசி உயரவில்லை. நிர்வாகத்திறமை மிக்க அரசு அதிமுக என்பதை நிரூபித்தோம். திமுக ஆட்சியில் அப்படி எந்த நிலையும் இல்லை ஆனால் விலைவாசி உயர்ந்துவிட்டது. விலைவாசியை குறைக்க திமுக அரசு எதுவுமே செய்யவில்லை. அதேபோல கட்டுமானப் பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்துவிட்டது. இனி எல்லோரும் கனவில்தான் வீடுகட்ட முடியும்.

எல்லாவற்றிலும் திமுகவுக்கு கமிஷன் கிடைக்கிறது. அதனால் விலை உயர்வு பற்றி திமுக அரசு கவலைப்படவில்லை. எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமலே திமுக ஆட்சியில் கடன் வாங்குகிறார்கள். 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன். 73 வருட தமிழக ஆட்சி வரலாற்றின் கடனை விட திமுக அரசின் கடன் அதிகம்.

திமுகவை பொறுத்தவரை ஊழல் செய்வதற்கு தேசிய அளவில் விருது கொடுக்கலாம். டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை 40 ஆயிரம் கோடி ஊழல் என்று சொல்லியிருக்கிறது. 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதில் வருடத்துக்கு 5,400 கோடி, நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி கொள்ளை.

கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப எதிரிகளைத் தோற்கடிக்க அமைக்கப்படுவது, கொள்கை என்பது நிலையானது. அப்படித்தான் அதிமுக இருக்கிறது. இனியும் மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டனர். இன்றைக்கும் மக்கள் செல்வாக்குள்ள கட்சி என்றால் அதிமுக என்பது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி, திமுக தலைவர்கள் நடத்துகின்ற கட்சி.

விவசாயிகளுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி, மும்முனை மின்சாரம், பயிர்க்காப்பீடு திட்டம் இழப்பீடு, குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் என பல திட்டங்கள் கொடுத்தது அதிமுக அரசு.

எந்த காலத்திலும் அதிமுகவை எவராலும் அழிக்கவே முடியாது. பலம் பொருந்திய மக்கள் செல்வாக்குள்ள கட்சியாக இன்றும் அதிமுக உள்ளது. ஆனால், திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை, அதனால்தான் வீடுவீடாகப் போய் உறுப்பினராகச் சேருங்கள் என்று பிச்சை எடுக்கிறார்கள். வெட்கமாக இல்லையா..? இந்தியாவில், தமிழ்நாட்டில் எங்காவது இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்டா? ஸ்டாலின் காண்பது பகல் கனவு, அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியாக அமையும். அதிமுக பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story