நடத்தையில் சந்தேகம்.. குடும்பம் நடத்த வர மறுத்த காதல் மனைவி.. வியாபாரி செய்த கொடூரம்

மனைவின் நடத்தையில் அவர் சந்தேகப்பட்டு வந்தநிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நடத்தையில் சந்தேகம்.. குடும்பம் நடத்த வர மறுத்த காதல் மனைவி.. வியாபாரி செய்த கொடூரம்
Published on

சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 37). இவருடைய மனைவி ரதிதேவி (27). இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு சுபஸ்ரீ (11) என்ற மகளும், ஸ்ரீகரன் (7) என்ற மகனும் உள்ளனர். கண்ணன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். ரதிதேவியின் நடத்தையில் கண்ணன் சந்தேகப்பட்டு வந்தாராம். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மன உளைச்சல் அடைந்த ரதிதேவி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கண்ணன் அடிக்கடி மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானம் செய்து வந்தார். அப்படி இருந்தும் ரதிதேவி சமாதானம் அடையவில்லையாம்.

மேலும் இனி சந்தேகப்பட மாட்டேன் என்றும், குடும்பம் நடத்த வருமாறும் கண்ணன் கூறி வந்துள்ளார். அதற்கு ரதிதேவி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் கண்ணன் ஆத்திரம் அடைந்தார். தான் வைத்திருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரதிதேவி உயிருக்கு போராடினார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ரதிதேவி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்ணனை கைது செய்தனர். நடத்தை சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவனே குத்திக்கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com