ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

இன்று முதல் வழக்கம்போல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் திட்டமிட்டு உள்ளனர்.
ராமநாதபுரம் ,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதானவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு கொண்டுவரக்கோரி மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி கடந்த 11-ந்தேதி முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம், ரெயில் மறியல் போராட்டத்தையும் மீனவர்கள் நடத்தினர்.
கடந்த 12 நாட்களாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். அதேபோல இன்று (சனிக்கிழமை) முதல் வழக்கம்போல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் திட்டமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வது குறித்தும், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்தும் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம். வழக்கம்போல் நாளை (அதாவது இன்று) முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. ேமலும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டாமல் மிகவும் பாதுகாப்புடன் மீன்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.






