சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.88 கோடி தங்கம் பறிமுதல்

தங்கத்தை கடத்தி வந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது மலேசியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு திரும்பிய தஞ்சாவூரை சேர்ந்த இளம்பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அவர் உள்ளாடைக்குள் 5 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து சுமார் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள 2½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இளம்பெண்ணை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், முதன் முதலாக குருவியாக சென்று தங்கம் கடத்தி வந்தபோது சிக்கியது தெரிந்தது. இளம்பெண்ணுடன் மேலும் 2 பெண்கள் உள்பட 4 பேர் மலேசியாவுக்கு சென்றதும், அவர்கள் 4 பேரும் ஏற்கனவே பலமுறை குருவியாக சென்று தங்கம் கடத்தி வந்து இருப்பதும், இதனால் தங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் கடத்தல் தங்கம் முழுவதையும் புதியதாக சுற்றுலாவுக்கு என்று கூறி அழைத்து சென்ற இளம்பெண்ணிடம் கொடுத்துவிட்டு, எதுவுமே தெரியாததுபோல் மற்ற 4 பேரும் தனித்தனியாக அதே விமானத்தில் சென்னை திரும்பி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பெண்கள் உள்பட 5 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இவர்களை மலேசியாவுக்கு அனுப்பிய கடத்தல் கும்பல் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.






