சென்னையில் நாளை இரவு வரை கனமழையா? வெதர்மேன் வெளியிட்ட முக்கிய தகவல்

சென்னை, திருவள்ளூருக்கு இரவு 10 மணி வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்.
சென்னை,
வங்கக்கடலில் நிலவிய ‘தித்வா’ புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்தது. இருப்பினும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து நீடிக்கிறது. தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கிய நிலையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்தநிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழை நீடிக்கும். நாளை இரவு வரை மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை இரவு வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது.நாளை இரவு வரை சென்னைக்கு அருகிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்க கூடும். சுழற்சி காரணமாக எப்போது வேண்டுமானாலும் மேகத்திரள் உருவாகி மழை பெய்யும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






