மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்மை அதிகாரி விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, புதூர் வட்டாரத்தில் சென்ற ஆண்டு 9,934 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
மக்காச்சோளம் பயிரை அதிகமாக தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தி பயிரை பாதுகாக்கும் வழிமுறை குறித்து புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, புதூர் வட்டாரத்தில் சென்ற ஆண்டு 9,934 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 10,000 முதல் 12,000 ஹெக்டர் வரை மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்காச்சோளம் பொதுவாக ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் வரை மகசூல் பெற்றுத்தரும் பயிராகும்.
மகசூல் இழப்பு ஏற்படாமல் இருக்க விவசாயிகள் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மற்றும் பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடித்தல் வேண்டும். மக்காச்சோளம் பயிரை அதிகமாக தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தி பயிரை பாதுகாக்கும் வழிமுறை குறித்து புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்கன் படைப்புழு நெல், மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் உட்பட 80 வகையான பயிர்களை தாக்கும் வல்லமை கொண்டது. மக்காச்சோளப் பயிரை அதிகளவில் இப்பூச்சி தாக்கி மகசூல் இழப்பை உருவாக்கும். இதனை ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளால் கட்டுப்படுத்திடல் வேண்டும்.
ஆரம்ப நிலையில் உள்ள பயிர்களில் இப்புழுவானது இளம் இலைகளின் தசைகளை உட்கொள்ளும் இலைகளின் ஓரங்களிலிருந்து உள்நோக்கி ஓட்டைகளை உருவாக்கும். பயிர்களின் இலைகளில் இவ்வோட்டைகளை ஆரம்ப நிலையிலேயே கண்காணித்து கட்டுபாட்டு முறைகளை கடைப்பிடித்தல் வேண்டும். பாதிக்கப்பட்ட இளம் செடிகளின் மீது காய்ந்த மணல் இடுவதாலும இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
வரப்பு பயிர்: வரப்பு பயிர் மூலம் மக்காச்சோளப் பயிரை படைப்புழு தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்தலாம். இறவை மக்காச்சோளத்தை சுற்றிலும் 3 வரிசைகளில் தட்டைப்பயறு, எள், துவரை அல்லது சூரியகாந்தி பயிரை நடலாம். மானாவாரிப் பயிராக இருந்தால், வரப்புப் பயிராக தீவனச் சோளத்தை நடலாம்.
இடைவெளி அவசியம்: பயிர்கள் நெருக்கமாக இருந்தால் பயிர்களுக்கு இடையே படைப்புழு வேகமாக பரவும். எனவே இறவை மக்காச்சோளத்திற்கு வரிசைக்கு வரிசை 60 சென்டி மீட்டரும், பயிருக்கு பயிர் 20 சென்டி மீட்டரும் இடைவெளி விட வேண்டும். மக்காச்சோளப் பயிரில் வரிசைக்கு வரிசை 45 சென்டி மீட்டர், பயிருக்கு பயிர் 20 சென்டி மீட்டர் இடைவெளியும் பத்து பயிர் வரிசைக்கு 75 சென்டி மீட்டர் இடைவெளியும் விட வேண்டும். இதனால் பயிர் பாதுகாப்பு செயல்பாடுகள் எளிதாகும்.
இனக்கவர்ச்சி பொறிகள் நிறுவுதல்: விதைத்த 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து படைப்புழுவின் அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்திடலாம். பொறியில் பொருத்தப்படும் லூரை 20 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பூச்சிகள் அதிகமாக காணப்பட்டால் ஏக்கருக்கு 20 பொறிகள் வைத்து அந்துப் பூச்சிகளை அதிக அளவில் கவர்ந்து அழிக்கலாம்.
பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும்போது, மருந்து மக்காச்சோளத்தின் நடுப்பகுதியான சுருளுக்குள் சென்று சேருமாறு கவனமாகத் தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான பயன்படுத்தி பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும். ஒரு முறை உபயோகித்த பூச்சி மருந்தை திரும்ப உபயோகிக்க கூடாது. பரிந்துரை இல்லாத ரசாயன பூச்சி மருந்துகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. இந்த ஒருங்கிணைந்த முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், படைப்புழுவின் சேதத்தை வெகுவாகக் குறைத்து, அதிக மகசூலை விவசாயிகள் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






