கருவை கலைக்க கூறிய கணவர்.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு

ஆரணியில் கணவர் கருவை கலைக்க கூறியதால் கர்ப்பிணி விபரீத முடிவை எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு என்பவரின் மகள் அஸ்வதி (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் திவாகர் (25). இவர்களுக்கு தியாஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது 3 மாத கர்ப்பிணியாக அஸ்வதி உள்ளார்.
இந்தநிலையில், கடந்த 22-ந் தேதி திவாகர் கர்ப்பத்தை கலைத்து விடு என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, அஸ்வதியை அவரது தாய் விமலா வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். நேற்று பகலில் அஸ்வதி திவாகர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது உன்னை கருவை கலைக்க சொன்னால் அங்கன்வாடி மையத்தில் குழந்தை பதிவு செய்திருப்பதாக கூறி திவாகர் மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அஸ்வதி தனக்கு உடல் நலம் சரியில்லை, சிறிதுநேரம் தூங்கிவிட்டு வருகிறேன் என்று கூறி அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அஸ்வதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அஸ்வதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா விசாரணை நடத்தி வருகிறார்.






