குமரி: விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்

குமரி வரும் சுற்றுலா பயணிகள், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்துச்செல்வது வழக்கம்.
கன்னியாகுமரி,
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். தற்போது விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டதால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.






