தூத்துக்குடியில் புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம்: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் முன்பு, தூத்துக்குடி நகர உட்கோட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மதன் முன்னெடுப்பின் படி புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் முன்பாக உள்ள விளையாட்டு வளாகத்தில் காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மதன் முன்னெடுப்பின் படி புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கத்தை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கத்தில் முதல் பந்தை அடித்து துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட எஸ்.பி. இதுகுறித்து பேசுகையில், இந்த விளையாட்டு அரங்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவர்களின் விளையாட்டு பயிற்சியை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க விளையாட்டு பயிற்சி மூலம் நல்வழிப்படுத்துவதற்காகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் மாவட்ட எஸ்.பி. இந்த விளையாட்டு அரங்கத்தை உருவாக்க உதவிய காவல்துறை அதிகாரிகளை பாராட்டி, தொடர்ந்து இதனை சிறப்பாக பாராமரிக்குமாறு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மதன், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.






