ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம்; தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் தொடருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் உரிய அனுமதி, பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாதவையாக இருப்பதாகக் கூறி, அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் 60 பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ விதிகளின்படி சாலை வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய ஆம்னி பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன. தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகளை வேறு வாகனங்களில் கர்நாடகாவுக்குச் செல்லுமாறு இறக்கிவிட்டனர்.இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் காலையிலேயே சுமார் 1 கி.மீ. தூரம் சுமைகளோடு நடந்து சென்று, பெங்களூரு பேருந்துகளில் ஏறி சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் தொடருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில்,ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,
தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.






