ஆன்லைன் குற்றங்கள் குறித்து “சக்ஷு” மூலம் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி காவல்துறை அறிவுறுத்தல்

வங்கிகள், அரசு துறைகள் அல்லது கூரியர் நிறுவனங்களின் பெயரில் மோசடிகாரர்கள் போலி செய்திகளை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன.
ஆன்லைன் குற்றங்கள் குறித்து “சக்ஷு” மூலம் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி காவல்துறை அறிவுறுத்தல்
Published on

பொதுமக்களின் தொலைத்தொடர்பு பாதுகாப்பிற்காக இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறை (DoT) தனது சஞ்சார் சாத்தி தளத்தில் சக்ஷு (Chakshu Option in Sanchar saathi portal) எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறை (DOT), தனது சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) இணையதளத்தில் (https://sancharsaathi.gov.in) பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சக்ஷு (Chakshu) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், குடிமக்கள் தங்களது மொபைல் போன்களில் பெறப்படும் சந்தேகத்துக்கிடமான போலியான அழைப்புகள், குறுஞ்செய்திகள் (SMS) அல்லது வாட்ஸ்அப் செய்திகள் போன்றவற்றை புகாரளிக்க முடியும். வங்கிகள், அரசு துறைகள் அல்லது கூரியர் நிறுவனங்களின் பெயரில் மோசடிகாரர்கள் போலி செய்திகளை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன.

இத்தகைய சந்தேகத்துக்கிடமான தகவல்களை "சக்ஷு" வாயிலாக எளிதில் புகாரளிக்கலாம். இதன் மூலம் தொலைத்தொடர்பு துறை போலியான மொபைல் எண்களை அடையாளம் கண்டு தடை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மோசடி சம்பவம் நடந்த 30 நாட்களுக்குள் புகார் அளிக்கலாம். இதற்காக பயனர்கள் பெறப்பட்ட தகவலின் வகையை (அழைப்பு/SMS/வாட்ஸ் அப்), மோசடி விவரங்களைச் சேர்த்து "Submit" செய்ய வேண்டும். இந்த தகவல்கள் பாதுகாப்பாக அமலாக்க முகமைகளுக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் பகிரப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

யாரேனும் நிதி இழப்புக்கு ஆளாகியிருந்தால், அவர்கள் உடனடியாக தேசிய இணைய குற்ற உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்ளவோ அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும்.

அதிகரித்து வரும் தொலைத் தொடர்பு மற்றும் ஆன்லைன் குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும். எனவே, அனைவரும் எச்சரிக்கையுடன் இருந்து, எந்தவொரு சந்தேகத்துக்கிடமான தகவலையும் உடனடியாக "சக்ஷு" வாயிலாக புகாரளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com