திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் தங்குவதற்கு தடையா? போலீசார் விளக்கம்

திருச்செந்தூர் முருகன் கோயில் இரவு நேரத்தில் பக்தர்கள் கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் கூறியதாக தகவல் வெளியானது.
திருச்செந்தூர்,
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகன் சூரபத்மனை வதம் செய்த இடம், தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம், அறுபடை வீடுகளில் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் கடற்கரை சார்ந்த தலம் என பல சிறப்புகளை திருச்செந்தூர் பெற்றுள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு தினசரி உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தங்கி சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.
இதனிடையே ஜோதிடர் ஒருவர் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் இரவில் திருச்செந்தூர் கடற்கரையில் நிலவொளியில் தங்கி மறுநாள் அதிகாலை புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கால் வைக்க கூட இடமில்லாத அளவுக்கு கடற்கரையில் மக்கள் திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக கோவில் முன்பு தங்கும் பக்தர்களிடம் அதிக அளவில் திருட்டு நடைபெறுவதும் பொருட்கள் காணாமல் போவதும் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவில் நிர்வாகம் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி இன்று முதல் கடற்கரை பகுதியில் யாரும் இரவு நேரங்களில் தங்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் இதனை மறுத்துள்ள போலீசார், திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல் துறையால் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பாக தங்க அறிவுறுத்தப்படுள்ளது என்று கூறியுள்ளனர்.






