அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x
தினத்தந்தி 6 Nov 2025 1:14 PM IST (Updated: 6 Nov 2025 1:42 PM IST)
t-max-icont-min-icon

பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டமானது சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையில் நடைபெற்றது.

அதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் (ம) நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் நானும் என்.ஆர். இளங்கோவன் பங்கேற்று பேசினோம். அம்பேத்கர் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் பேச்சு, எழுத்து உரிமை வேண்டும் என கூறினார். ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக கூடும் உரிமை அனைவருக்குமே உள்ளது.

நீதிமன்ற பரிந்துரைகள் ஏற்ற வகையில் இருக்க வேண்டும். ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த கண்டிஷன் போட்டாலும், அடிப்படை உரிமைகளை மீறாமல் இருக்க வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பின்னர் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும், மேலும் ஏதேனும் மாற்றம் இருந்தால் திருத்தப்படும்” என்று அவர் கூறினார்.

இதனிடையே ரோடு ஷோ நடத்தக்கூடாது என்று சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளை கண்காணிக்க குழு அமைப்படும் என்றும், மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டத்தில் போலீசாரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும், பொதுக்கூட்டங்களை கண்காணிக்க மற்றும் அனுமதி வழங்க குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் நிகழ்ச்சிக்கு முன் 2 மணி நேரத்திற்கு மேல் மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களை 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்த 10 நாட்களுக்கு முன்பும் 15 நாட்களுக்கு மிகாமல் அனுமதி கோர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு டெபாசிட் தொகை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 5,000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட் தொகையாக நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story