ராமநாதபுரம்: வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது


ராமநாதபுரம்: வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது
x

வீடு புகுந்து மகன், மகள் கண்முன் பெண்ணை முகமூடி கும்பல் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வெட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய கோபால் (வயது 40). இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தை சேர்ந்த ஜெர்மின் (36) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து ஜெர்மின் ஜீவனாம்சம் கேட்டு முதுகுளத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் கடந்த18-ந் தேதி இரவு ஜெர்மின் தனது மகன், மகளுடன் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த 2 பேர், குழந்தைகள் கண் எதிரே ஜெர்மினை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் உத்தரகாண்ட மாநிலத்தில் இருந்து விஜயகோபாலை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் விஜயகோபால் கூலிப்படையை ஏவி மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயகோபாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

நான் கட்டிய வீட்டை ஜெர்மின் அபகரிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதற்காக கன்னிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கர் (38) என்பவரை தொடர்பு கொண்டேன். அவரது ஏற்பாட்டின் பேரில் சங்கர் உள்பட 5 பேர் சேர்ந்து ஜெர்மின் தங்கியிருந்த வீட்டை நோட்டமிட்டு வந்தனர். சம்பவத்தன்று இரவில் கூலிப்படையினர் 2 பேர், அந்த வீட்டுக்குள் புகுந்து ஜெர்மினை வெட்டிக்கொலை செய்தனர். இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பெண் கொலை வழக்கில் ஏற்கனவே கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story