யானை வழித்தடங்கள் குறித்து வரும் பிப்ரவரிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - ஐகோர்ட்டில் வனத்துறை தகவல்


யானை வழித்தடங்கள் குறித்து வரும் பிப்ரவரிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - ஐகோர்ட்டில் வனத்துறை தகவல்
x

பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்களை அறிவிப்பது தொடர்பாகவும், அவற்றை பாதுகாப்பது தொடர்பாகவும் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணையின்போது, தமிழகத்தில் உள்ள ஒருங்கிணைந்த யானை வழித்தடங்களை கண்டறிந்து, அது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசால் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்தும் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது சம்பந்தமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து யானை வழித்தடங்கள் தொடர்பான இறுதி அறிக்கை 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என கோர்ட்டில் வனத்துறை தெரிவித்துள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 28-ந்தேதக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

1 More update

Next Story