முத்துநகர் அதிவிரைவு ரெயில் காலை 7 மணிக்குள் சென்னை சென்றடைய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரெயிலுக்கு இரு மார்க்கத்திலும் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் நிறுத்தம் உடனடியாக வழங்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முத்துநகர் அதிவிரைவு ரெயிலின் பயண நேரத்தை குறைத்து காலை 7 மணிக்குள் சென்னை எழும்பூரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் பிரமநாயகம் தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி-சென்னை இடையே இயக்கப்படும் முத்துநகர் அதி விரைவு ரெயிலை (வண்டி எண்: 12694) 1-1-2026 முதல் தூத்துக்குடியில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும் வகையில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் 30 நிமிடங்களில் பயண நேரத்தைக் குறைத்து அறிவித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த ரெயிலை தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலை 7 மணிக்குள் சென்னை எழும்பூரை சென்றடைய வேண்டும் என்று கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. வருங்காலங்களில் பயண நேரத்தை குறைத்து காலை 7 மணிக்குள் சென்னை எழும்பூரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது வண்டி எண்: 12693-12694, முத்துநகர் தூத்துக்குடி-சென்னை, சென்னை- தூத்துக்குடி அதிவிரைவு ரெயில் பகிர்தல் (Sharing) இல்லாமல் தனியாக இயக்கப்பட்டு வருகிறது. மேற்சொன்ன ரெயிலில் எப்போதும் காத்திருப்போர் பட்டியல் அனைத்து வகுப்புகளிலும் காணப்படுவதால் முத்துநகர் ரெயிலை பகிர்தல் செய்து, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக, அதிகாலை சென்னை எழும்பூரை சென்றடையும் வகையில் தினசரி மாலையில் நேரடி ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் பிளாட்பாரம் பிரச்சினை இருப்பினும் இந்த ரெயிலை ரேணிகுண்டா அல்லது விஜயவாடாவிற்கு நீடித்தால், தென் மாவட்ட பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் விரைவு ரெயில் (வண்டி எண்: 15765) 50 நிமிடங்கள் குறைத்துள்ளமைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த ரெயிலுக்கு தூத்துக்குடி மேலூர் நிறுத்தம் வழங்கப்படாமல் உள்ளது. இரு மார்க்கங்களிலும் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் நிறுத்தம் உடனடியாக வழங்க அனுமதி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த ரெயில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் பிட்லைன் பணிகள் முடிந்தவுடன் வாரத்திற்கு உடனடியாக 3 நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த ரெயிலை தினசரி ரெயிலாக, விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு நேரடி ரெயில் இயக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆதலால் மதுரை- லோக்மான்யா திலக், லோக்மான்யாதிலக்- மதுரை (வண்டி எண்: 22101-22102) வாராந்திர ரெயிலை தூத்துக்குடி வரை நீடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மைசூர்- தூத்துக்குடி ரெயிலை (வண்டி எண்: 16236) காலை 9.30 மணிக்குள் தூத்துக்குடி சென்றடைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






