ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை: 15 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை!


ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை: 15 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை!
x

15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் முதலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது30). மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் சொந்தமாக இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு 15 வயது சிறுமி, தனது அக்காளுடன் மொபட்டை பழுது பார்க்க சென்று உள்ளார்.

அப்போது சதீஷ்குமாருக்கு அந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. கோழிப்பண்ணையில் வேலை செய்து வரும் அந்த சிறுமியுடன் சதீஷ்குமார் அடிக்கடி செல்போனில் பேசி வந்து உள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சதீஷ்குமார், அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று, ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் கர்ப்பம் அடைந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்துக்கு சதீஷ்குமாரே காரணம் என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story