வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

அனைவரும் ஒன்றிணைந்து வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் எந்த முயற்சியையும் எதிர்க்க வேண்டும் என முபாரக் தெரிவித்துள்ளார்.
சென்னை,
எஸ்டிபிஐ கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான பாசிச எதிர்ப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக எஸ்டிபிஐ கட்சியின் சென்னை வடக்கு மண்டலம் சார்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், எஸ்டிபிஐ கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பூட்டோ மைதீன் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் செய்யது அஹமது வரவேற்புரையாற்ற, மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது இஸ்மாயில் நன்றியுரையாற்றினார். வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் சீனி முகம்மது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும், வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஷாநவாஸ், சென்னை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முகைதீன் அன்சாரி, மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் சலீம் ஜாபர் உள்ளிட்ட மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், விசிக துணைப் பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர். மேலும், மவுலவி அப்துல் கனி பாகவி, எஸ்டிடியூ சென்னை மண்டல தலைவர் முஸம்மில் பாஷா, விம் மாநில செயற்குழு உறுப்பினர் சமிமா ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசுகையில், “1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் நிகழ்ந்த அந்த பாபரி மஸ்ஜித் தகர்ப்பு என்பது வெறும் கட்டிட இடிப்பு மட்டுமல்ல; அது இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவையே தாக்கிய பயங்கரவாதச் செயலாகும். இடிக்கப்பட்டது ஒரு பள்ளிவாசல் மட்டுமல்ல – மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு, வழிபாட்டு உரிமை, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் ஆகிய அனைத்தும் ஒருசேரத் தரைமட்டமாக்கப்பட்டன. எனினும் அந்த அநீதிக்கு நீதி என்பது கிடைக்கவில்லை. மாறாக ஆதாரங்களை புறக்கணித்து பெரும்பான்மை மனச்சாட்சி அடிப்படையில் சட்டத்திற்கு எதிராக தீர்ப்பு எழுதப்பட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நீதித்துறை, சர்வதேச அளவில் கேலிக்குரியதாக மாறியது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சாதகமாக்கிகொண்ட மதவாத சக்திகள் இன்றைக்கு கியான்வாபி, மதுரா ஷாஹி ஈத்கா, டெல்லி ஜாமா மஸ்ஜித் எனப் பல நூற்றாண்டு பழமையான மஸ்ஜிதுகளை இலக்காக்கி அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கிவிட்டன. மறுபுறம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ப் (திருத்த) மசோதா, முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய உரிமைகளையே பறிக்கும் முயற்சியாக, வக்ப் சொத்துகளை அரசு எளிதில் கைப்பற்றவும், அவற்றின் மீதான முஸ்லிம்களின் கட்டுப்பாட்டை அற்றுப்போகச் செய்யவும் சட்டம் இயற்றியுள்ளது.
மதச்சார்பின்மை எனும் அரசியலமைப்பு உத்தரவாதத்தை மெல்ல மெல்ல அரித்து இல்லாமலாக்கும் சதிச்செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சிறுபான்மையினர் பாதுகாப்பு என்பது வெறும் சட்டப் பிரிவுகள் அல்ல – அது இந்தியத் தேசியத்தின் அடித்தளம். அதைத் தகர்த்தால் இந்தியா என்ற கட்டமைப்பே சிதறிவிடும்.
எனவே சட்டத்தின் நீதியும், அமைதி நல்லிணக்கம் நிலைபெறவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் எந்த முயற்சியையும் எதிர்க்க வேண்டும், வக்ப் உரிமைகளைக் காக்க வேண்டும், மதச்சார்பின்மையை அரசியலமைப்பின் உயிர்நாடியாக மீட்டெடுக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.
இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டு, வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க முழக்கமிட்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






