வாலிபர் மரணத்தில் திடீர் திருப்பம்: பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால் உறவினர்கள் அடித்து கொன்றது அம்பலம்

கோப்புப்படம்
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபரை பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கோவையை அடுத்த கணபதியில் ஜீவா (25 வயது) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அவரது வீட்டின் அருகே வசித்த பெண் குளிப்பதை ஜீவா வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் ஜீவாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு காயத்திற்கான காரணத்தை கேட்டபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவித்தனர். போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தியபோதும், ஜீவா தான் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும், நடவடிக்கை தேவையில்லை என்றும் எழுதி கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 26-ந்தேதி ஜீவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னர் ஜீவாவின் அண்ணன் விசாரித்தபோது, பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால்தான் ஜீவா உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், ஜீவாவின் வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் தான் தனது சகோதரன் இறந்ததாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
சம்பவம் நடந்தது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சரவணம்பட்டி போலீசார் விசாரிக்க மாநகர கமிஷனர் உத்தரவிட்டார். இதன்பேரில் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இறந்த வாலிபரின் வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.






