முதல்-அமைச்சர் முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார்; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


முதல்-அமைச்சர் முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார்; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
x

நெல்லைப்பிடித்திருக்க வேண்டிய முதல்-அமைச்சரின் கை படக்குழுவினரின் கைகளை பற்றியிருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்காக ஆங்காங்கே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொட்டி வைத்து காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் பல்வேறு நிர்வாக பிரச்சினை காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பும் பணி தேக்கமடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மாவட்டம் முழுவதும் தேங்கியுள்ளன. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்திலும், சாலையோரங்களிலும் கொட்டி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக விளைநிலங்களில் மழை நீர் வடியாததால் பெரும்பாலான இடங்களில் பயிர்கள் அனைத்தும் அழுகி நெல்மணிகள் முளைக்க தொடங்கி விட்டது. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வரும் நெல் குவியல்களை பார்வையிட அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார்.

பின்னர் அவர் தஞ்சை அருகே காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்த ஏராளமான விவசாயிகளிடமும் கொள்முதல் தாமதம் காரணமாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வரும் நிலை குறித்தும், தொடர் மழையால் மூழ்கி பாதிப்படைந்த நெற்பயிர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டு அறிந்தார்.

இந்தநிலையில் இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை,

ஆனால் தான் எதற்கு முதல்-அமைச்சர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய முதல்-அமைச்சர் என்பதுதான் கவலை அளிக்கிறது,#ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?

ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்-அமைச்சருக்கு நேரம் இருக்கிறது.தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்?

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்?அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா?அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான். விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story