கோபியே அதிரும் அளவுக்கு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஓட்டு வாங்க உங்களை அணுகினார்; ராஜினாமா செய்யும்போது கேட்டாரா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
Published on

ஈரோடு,

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் முதல்முறையாக கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி,

கோபியே அதிரும் அளவுக்கு கூட்டம் கூடியுள்ளது. 2026 தேர்தலை வெல்லும் அதிமுக. இந்த தொகுதியில் ஓட்டு வாங்க உங்களை அணுகினார். ராஜினாமா செய்யும்போது கேட்டாரா? கோபிசெட்டிபாளையம் தொகுதி எடப்பாடி தொகுதியை விட வளர்ச்சி பெறும். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அதிமுக நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளின் அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றியது அதிமுக.இன்றைய ஸ்டலின் அரசுபோல மத்திய அரசிடம் இருந்து நாங்கள் நிதி கேட்கவில்லை. அதிமுக குழந்தைக்கு பேர் வைத்துள்ளார் ஸ்டாலின். நான்கு வழிச்சாலையை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான். எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத கையாலாகாத, திறமையற்ற அரசு செயல்பட்டு வருகிறது .

நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை, வெள்ளி, தங்கம்போல கொலை நிலவரம் பார்க்கும் சூழல். 4 அதிகார மையங்கள் கைகளில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தை ஸ்டாலின், உதயநிதி, துர்கா, சபரீசன் என 4 முதல்-அமைச்சர்கள் ஆட்டிப்படைக்கின்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஆதிக்கம் செலுத்துகிறது.தமிழகத்தில் சட்டம் ஒங்கு சந்தி சிரிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடக்கிறது.

மழை, புயல் பாதிப்புகளில் ஓடோடுப்போய் விவசாயிகளுக்கு உதவி செய்தது அதிமுக. எதிர்க்கட்சியாக இருந்தாலும் விவசாய மக்களுக்கு உதவி செய்யக்கூடிய கட்சி அதிமுக.

மக்கள் மீது அக்கறை இல்லாதவர் செங்கோட்டையன். அதிமுக தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார். உங்களுக்கு அடையாளம் கொடுத்தது, பதவி கொடுத்தது அதிமுக.அத்திக்கடவு - அவினாசி திட்ட விழாவில் ஜெயலலிதா படம் இல்லை எனக்கூறி பங்கேற்கவில்லை. வேறு கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அவகாசம் கொடுத்தோம் அவர் திருந்துவதுபோல் இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருடன் பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக நினைவிடம் சென்றார். திட்டமிட்டு 2,3 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்தபடி கட்சிக்கு துரோகம் செய்தவர் செங்கோட்டையன்.

அப்படிப்பட்டவர் கட்சியில் தொடர தலைமை எப்படி அனுமதிக்கும்.எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சி தூய்மையற்றதா? அப்படி சென்றவர் துண்டை மாற்றியதும் கருத்தையும் மாற்றிவிட்டார். இங்கிருந்து சென்று வேறு கட்சியில் இணைந்தவர் எங்கிருந்தாலும் வாழ்க.எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம்போல இதுவும் சோதனைக்காலம். இப்போது இருக்கும் சோதனைகளை வென்று 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும். 2026-ல் வெற்றி பெற்றாவுடன் கோபிசெட்டிபாளையத்திற்கு வந்து கொண்டாடுவோம். அதிமுகவை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com