திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 8 புதிய அறிவிப்புகள்...என்னென்ன?

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
திண்டுக்கல் ,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.16 கோடியில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், இடும்பன்குளம் மற்றும் சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், புதிய நத்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.18.50 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். மார்க்கம்பட்டியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.7 கோடியில் அமைக்கப்படும். கொடைக்கானல் மலை கிராமத்தில் 100 ஏக்கரில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுற்றுலா முதலீட்டு பூங்கா உருவாக்கப்படும்.
ஒட்டன்சத்திரத்தில் ரூ.17 கோடி செலவில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும் என்றும், ஏற்றுமதியாகும் கண்வலி கிழங்குக்கு நியாயமான மற்றும் நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்தார். இந்த விழாவில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.






