தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு வி.எச்.பி. வலியுறுத்தல்

பொதுக்குழுவில் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசும்போது ‘‘சட்டசபைத் தேர்தலுக்குமுன் லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட இந்து எழுச்சி மாநாடு நடக்க இருக்கிறது’’ என்று கூறினார்.
தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு வி.எச்.பி. வலியுறுத்தல்
Published on

தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் 41வது பொதுக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில், நிறுவனர் எஸ்.வேதாந்தம் அறிவுறுத்தலின் பேரில், மாநிலத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் சோமசுந்தரம், இணை பொதுச்செயலாளர் ராமசுப்பு, பொருளாளர் சசிகுமார், செயல் தலைவர் செல்லமுத்து, துணைத்தலைவர் கிரிஜா சேஷாத்ரி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கத்தில், தலைநகர் டில்லியில் நடந்த தீவிரவாத தாக்குதல் திட்டமிட்ட மிகப்பெரிய வெளிநாட்டு சதி. வரும் காலங்களில் இதுபோன்ற துயர சம்பவம் நடக்காமல் மத்திய அரசும், மாநில அரசுகளும் எந்த பாகுபாடும் இல்லாமல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பெண்களின் அடிப்படை சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது. பாலியல் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் பெருகி, பெரும் துயரமாக மாறி இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

போதையை ஒழிக்கணும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கேள்விக்குறியாக உள்ளது. கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கும் சூழல் நிலவுவதுதான் இதற்கு காரணம். இந்த விஷயத்தில், போலீசார் போதிய கவனம் செலுத்தி, முற்றிலும் ஒழித்து இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்றும் நமது வழிபாடுகளுக்கு, எந்த தடையும் இல்லாதபடி, இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தாமதமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பீகார் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி, நிதிஷ்குமார் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளதுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்படுகிறது.

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், சில விஷக்கிருமிகளின் செயலால் முழு பாடலும் ஒலிபரப்பப்படவில்லை. 150 ஆண்டுகளுக்கு பிறகு, பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய முழுமையான பாடலை பாட வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கூட்டத்தில் அமைப்பின் செயல்பாடுகள், இப்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். அவர்களுக்கு மாநிலத் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆலோசனைகள் வழங்கினார்.

பொதுக்குழுவில் ஆர்.ஆர்.கேபால்ஜி பேசும்போது, சட்டசபைத் தேர்தலுக்குமுன், லட்சம் பேர் பங்கேற்கும் வகையில், பிரம்மாண்ட இந்து எழுச்சி மாநாடு நடக்க இருக்கிறது என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com