தூத்துக்குடியில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது; கார் பறிமுதல்


தூத்துக்குடியில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது; கார் பறிமுதல்
x

கொலை செய்யப்பட்ட சிவசூரியன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாமரைமொழி கிராமத்தை சேர்ந்த தனது அக்காவின் கணவரான கந்தையா என்பவரை கொலை செய்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள தாமரைமொழி கிராமத்தைச் சேர்ந்த அரசப்பன் மகன் சிவசூரியன் (வயது 34). இவர் நேற்று காலை உடன்குடியில் இருந்து வேப்பங்காடு கிராமத்திற்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து ஒரு கார் வேகமாக வந்தது. வேப்பங்காடு சர்ச் அருகே சென்றபோது அந்த கார் இவரது பைக் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவசூரியனை அந்த காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கொலை செய்யப்பட்ட சிவசூரியன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாமரைமொழி கிராமத்தை சேர்ந்த தனது அக்காவின் கணவரான கந்தையா என்பவரை கொலை செய்தாராம். இதில் தட்டார்மடம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமினில் வந்த சிவசூரியன் பழிக்குப்பழியாக கொலை செய்ப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக தட்டார்மடம் மேல நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ஆறுமுகம்(58), மெய்ஞானபுரம் மருதூர்கரையைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் கார்த்திக்(26), நாங்குநேரி தென்மலை கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் கார்த்திக்(26), திருவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைதான ஆறுமுகம் ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட கந்தையாவின் உடன்பிறந்த அண்ணன் ஆவார். மற்ற 3 பேரும் கந்தையாவின் அக்காவின் மகன்கள் ஆவார்கள். இதனால் கந்தையா கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

1 More update

Next Story