காசா போர்நிறுத்தம்; 7 பணய கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல்

7 பணய கைதிகள் விடுவிப்பு செய்தியை இஸ்ரேல் தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்டதும், பணய கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆனந்தத்தில் கூச்சலிட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கெய்ரோ,

காசா மீது 2 ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதுதவிர உணவுக்கு வழியின்றி பஞ்சம், பட்டினியிலும் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில் பலன் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முன்தினம் முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, அமைதிக்கான போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக, டிரம்ப் இஸ்ரேலுக்கு புறப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பிடம் 20 பணய கைதிகள் வரை உயிருடன் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.

அவர்களில் 7 பணய கைதிகளை, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு இன்று விடுவித்து உள்ளது. இதுபற்றிய தகவலை இஸ்ரேல் தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்டதும், பணய கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆனந்தத்தில் கூச்சலிட்டனர்.

இந்த கைதிகள் பரிமாற்ற நிகழ்வு டெல் அவிவ் நகரில் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடைபெறும். இதனை நாடு முழுவதும் உள்ள பொதுவெளியில் அமைக்கப்பட்ட திரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com