லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல்

தெற்கு லெபனானின் ஜ்வாயா பகுதியில் கடந்த டிசம்பர் 15-ந்தேதி, ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த பயங்கரவாதி ஜகாரியா படுகொலை செய்யப்பட்டார்.
ஜெருசலேம்,
காசாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, லெபனானின் தெற்கே சமீப மாதங்களாக ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்களின் தளங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி அழித்துள்ளனர்.
இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் பல்வேறு ராணுவ தளங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. சமீப மாதங்களாக அவற்றில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த தளங்களில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்களின் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வை அத்துமீறும் வகையில், இந்த ஆயுத கிடங்குகளில் ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பயங்கரவாத செயல்கள் இருந்தன என தெரிவித்து உள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் இருந்து இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 400-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் கொல்லப்பட்டதுடன், அவர்களுடன் தொடர்புடைய தளங்களை இலக்காக கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.
கடந்த டிசம்பர் 15-ந்தேதி, தெற்கு லெபனானின் ஜ்வாயா பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த பயங்கரவாதியான ஜகாரியா யாஹியா அல்-ஹஜ் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு சில மணிநேரத்திற்கு முன் 2 பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஜகாரியா லெபனானின் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் ஏஜென்டுகளை ஊடுருவ செய்ததுடன், ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக பேசுபவர்களையும் அடக்கி ஒடுக்கினார். இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலான வகையில் இந்த பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் இருந்தன என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது.






