பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 657 ஆக உயர்வு

கனமழை , வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
லாகூர்,
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் கைபர் பக்துவா, சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், பல பகுதிகளில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கனமழை, வெள்ளத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 657 ஆக அதிகரித்துள்ளது. இதில், 171 குழந்தைகள், 94 பெண்களும் அடக்கம். மேலும், கனமழை , வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேவேளை, பாகிஸ்தானில் கனமழை 22ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.






